இதோ, நான் உன்னை தேசங்களில் சிறுகும்படிச் செய்தேன்; நீ மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கிறாய்.
3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த பகுதியிலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை ஏமாற்றுகிறது.
4
நீ கழுகைப்போல உயரத்திற்குப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
5
நீ எவ்வளவாகச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்! திருடர்களோ, இரவில் கொள்ளையடிக்கிறவர்களோ உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானஅளவு திருடுவார்கள் அல்லவோ? திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
6
ஏசாவினுடையவைகள் எவ்வளவாகத் கொள்ளையடிக்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாக ஆராய்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.
7
உன்னுடன் உடன்படிக்கை செய்த எல்லா மனிதர்களும் உன்னை எல்லைவரை துரத்திவிட்டார்கள்; உன்னுடன் சமாதானமாயிருந்த மனிதர்கள் உன்னை ஏமாற்றி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை.
8
அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் மலையிலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
9
தேமானே, ஏசாவின் மலையிலுள்ள மனிதர்கள் அனைவரும் கொலையினால் அழிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
10
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய்.
11
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர்கள் அவனுடைய படையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார்கள் அவனுடைய வாசல்களுக்குள் நுழைந்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
12
உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
13
என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும்,
14
அவர்களில் தப்பினவர்களை அழிக்க வழிச்சந்திப்புகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடுக்காமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
15
எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய யெகோவாவுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
16
நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள்.
17
ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
18
யாக்கோபு வம்சத்தார்கள் நெருப்பும், யோசேப்பு வம்சத்தார்கள் நெருப்புத்தழலுமாக இருப்பார்கள்; ஏசா வம்சத்தார்களோ வைக்கோல் துரும்பாக இருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியாக இல்லாமல் இவர்களை சுட்டெரிப்பார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
19
தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.