Pro 29

? AI
1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.
2
நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.
3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.
4
நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.
5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6
துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
7
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.
8
பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.
9
ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10
இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.
11
மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.
13
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.
14
ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.
16
துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
17
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
18
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.
20
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.
21
ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
22
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; கடுங்கோபி பெரும்பாதகன்.
23
மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.
24
திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
25
மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26
ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Global Bible Tools - Collaborative Bible translation platform